கியவ்: உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ரஷ்யா வாக்கெடுப்பு நடத்துகிறது. வாக்
கெடுப்பு நேற்று தொடங்கியது.
கைப்பற்றப்பட்ட பகுதிகள் ரஷ்யாவில் சேர அங்குள்ள மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள
வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கிழக்கு டொனெட்ஸ்க், லுஹான்ஸ் பகுதிகள், தென்கெர்சோன், ஸாப்போரிசியா ஆகிய இடங்களில் நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பை உக்ரேனுக்கு ஆதரவாக இருக்கும் மேற்கத்திய நாடுகள் ஏற்க மறுத்து, கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா நடத்தும் இந்த வாக்கெடுப்பு ஒரு மோசடி என்று அவை வர்ணித்துள்ளன.
இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவுக்குச் சாதகமாகத்தான் அமையும் என்று அரசியல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் மோசமடையும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் தெரிவித்தார்.
ரஷ்யா நடத்தும் வாக்கெடுப்பு நேற்று தொடங்கி வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் என்று அறியப்படுகிறது.
உக்ரேனுக்குச் சொந்தமான
பகுதிகளில் இருக்கும் மக்கள்தொகையில் 15 விழுக்காட்டினர்
மட்டுமே வாக்களிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆள்சேர்ப்பில் தீவிரம்
இதற்கிடையே, உக்ரேனுக்கு எதிரான போரில் களமிறங்க ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
போரிட விரும்பாமல் ரஷ்ய ஆண்கள் பலர் பிற நாடுகளுக்குத் தப்பி ஓடி அங்கு அடைக்கலம் நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு போர்க்
களத்துக்கு அனுப்பப்படக்கூடும் என்ற அச்சம் ரஷ்யர்கள்
பலரிடையே நிலவுவதாக அறியப்படுகிறது.
ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானச் சேவைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரி
பவர்களை ராணுவத்தில் சேர்க்கும் பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
இதற்கான உத்தரவுக் கடிதங்கள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நிறு
வனத்திலிருந்தும் 50லிருந்து 80 விழுக்காட்டு ஊழியர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் ஏரோஃபிளோட் விமானச் சேவையின் ஊழியர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் சேர்க்கப்படக்கூடும் என்று அந்த விமானச் சேவைக்கு நெருக்கமான ஒருவர் செய்தி
யாளர்களுக்குத் தகவல் அளித்ததாக நம்பப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஏரோஃபிளோட் மறுத்துவிட்டது.
இதற்கிடையே, தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சிலரும் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்களும் வங்கி அதிகாரிகளும் உக்ரேனுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
இதற்கிடையே, உக்ரேன் மீது படையெடுக்கும் சூழ்நிலைக்கு அதிபர் புட்டின் தள்ளப்பட்டார் என்று இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தெரிவித்துள்ளார்.
"உக்ரேனுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்க புட்டினுக்கு அவரது கட்சியினர், அமைச்சர்கள் ஆகியோர் நெருக்குதல் அளித்தனர்," என்று திரு பெர்லுஸ்கோனி தெரிவித்தார்.

