நோம் பென்: கம்போடியாவில் நேர்ந்த படகு விபத்தில் ஆகக் கடைசி நிலவரப்படி சீனாவைச் சேர்ந்த குறைந்தது 10 பேரை இன்னமும் காணவில்லை என்று சம்பவம் நிகழ்ந்த பகுதியின் மாநிலத்தின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிஹானுக்வில் நகரைத் தாண்டிய தீவுகளுக்கு அருகே படகு ஒன்று கடந்த வியாழக்கிழமையன்று மூழ்கியது. படகில் 40க்கும் அதிகமானோர் இருந்தனர்.
குறைந்தது ஓர் உடல் கண்டெடுக்கப்பட்டது. வியட்நாமைச் சேர்ந்த அதிகாரிகள் ஒன்பது பேரை மீட்டதாக மாநில அரசாங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.
வியட்நாமின் ஃபு குவோக் தீவில் ஒன்பது பேர் மீட்கப்பட்டதாக வியட்நாமின் 'மோட் தி கியோய்' நாளிதழ் தெரிவித்தது. அங்குள்ள அதிகாரிகள் இவ்வாறு கூறியதாக அது குறிப்பிட்டது.
காணாமற்போயிருக்கும் சீனர்களைப் பற்றி மாநில அரசாங்கம் விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை. மீட்கப்பட்டோரிலோ காணாமற்போனவர்கிளிலோ கம்போடியர்கள் இடம்பெற்றுள்ளனரா என்பது குறித்தும் தகவல் இல்லை.
சிஹானுக்வில், சுற்றுப்பயணிகள், சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடையே பிரபலமான நகரம்.
சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள், வர்த்தகர்கள் ஆகியோரிடையே கம்போடியா பிரபலமாக இருந்து வந்துள்ளது. எனினும், சீனாவில் நடப்பில் இருக்கும் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் சீனர்கள் பலரால் கடந்த ஈராண்டுகளாகப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.
சிஹானுக்வில்லில் பல சூதாட்டக் கூடங்கள் இருக்கின்றன. இணையக் குற்றவாளிகள் இயங்குவதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு காவல்துறை சோதனைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.

