பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மிகத் தவறான, அபாயகரமான அறிகுறிகளைக் காட்டுவதாக சீனா கூறியுள்ளது.
தைவான் தொடர்பில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டுவது மிகவும் முக்கியம் என்று நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சரிடம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையே நடைபெற்ற ஒன்றரை மணிநேரப் பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரத்தைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டதென அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபை கூடியபோது இருவரும் சந்தித்துப் பேசினர்.
"தைவான் விவகாரம் சீனாவின் தனிப்பட்ட பிரச்சினை. அதற்கு எவ்வாறு தீர்வுகாணப்படும் என்பதில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது," என்று திரு வாங் சொன்னதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

