ஈரானில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் 35 பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிஜாப் எனும் தலையங்கியை அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட ஓர் இளம் பெண் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. இதில் மாண்டோர் எண்ணிக்கை 17லிருந்து 35க்கு அதிகரித்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது. மாண்டோரில் ஐந்து பாதுகாப்புப் படை அதிகாரிகளும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.அதோடு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாநிலத்தில் மட்டும் 60 பெண்கள் உள்ளிட்ட 739 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பையும், நிம்மதியையும் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ராய்ஸி எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டிலும், பல நாடுகளிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டியதோடு, தங்கள் தலையங்கியை தீயிட்டும் கொளுத்தினர்.