ரஷ்யப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டுகொன்றான்.
இந்த சம்பவத்தை மனிதாபிமானற்ற பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார்.
தாக்குதலை நடத்தியவனுடைய அடையாளம், அவனுடைய நோக்கம் ஆகிய தகவல்கள் தெளிவாக தெரியவில்லை எனக் கூறப்பட்டது.
துப்பாக்கிக்காரன் கருப்பு ஆடைகள் அணிந்திருந்ததாகவும், அவனுடைய தலையும் முகமும் மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அவன் அணிந்திருந்த சட்டையில் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிக்காரனிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளும் பல தோட்டாகளும் இருந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
ரஷ்யாவில் அண்மைய ஆண்டுகளில் பல பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரலில் பாலர் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு குழந்தைகளும் ஓர் ஆசிரியரும் கொல்லப்பட்டனர்.