புலாக்கான் (பிலிப்பீன்ஸ்): நொரு சூறாவளியால் வட பிலிப்பீன்சின் பல மாநிலங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சூறாவளியில் ஐந்து அவசர சேவைப் பணியாளர்கள் உட்பட குறைந்தது அறுவர் மாண்டனர். சான் மிகுவெல் நகரில் அவசர சேவைப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
நோரு சூறவாளி முதலில் தாக்கிய பொலில்லோ தீவில் உள்ள பர்டியோஸ் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு முதியவர் ஒருவர் மாண்டதாக அப்பகுதியின் பேரிடர் செயல்பாட்டு அலுவலகம் தெரிவித்தது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினெண்ட் மார்க்கோஸ் ஜூனியர் நிலவரத்தை நேற்று ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டார். வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உதவ அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
லூஸோன் தீவில் பல விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தலைநகர் மணிலாவில் பங்குச் சந்தை, அரசாங்க அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவை நேற்று மூடப்பட்டன.
நோரு சூறாவளி அடுத்ததாக இந்த வாரம் வியட்னாமைத் தாக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் அந்நாட்டில் காப்பி தயாரிக்கப்படும் 'சென்ட்ரல் ஹைலண்ட்ஸ்' பகுதியில் கடும் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்னாம், உலகின் இரண்டாவது ஆகப் பெரிய காப்பி உற்பத்தி நாடு. பொதுவாக அக்டோபர் மாதம் முதல் மறு ஆண்டு ஜனவரி மாதம் வரை அங்கு காப்பிக் கொட்டைகளுக்கான அறுவடைக் காலம்.
சூறாவளி, காப்பிக் கொட்டை அறுவடையைப் பாதிக்கக்கூடும். அதனால் உலகளவில் காப்பி ஏற்றுமதியில் இடையூறுகள் நேரலாம் என்று அஞ்சப்படுகிறது.
நோரு, இந்த வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் காணாத ஆக மோசமான சூறாவளி. அது தாக்கவிருப்பதை முன்னிட்டு மத்திய வியட்னாமில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.