மாஸ்கோ: ரஷ்யாவில் சுவஸ்திக்கா சின்னத்தைக் கொண்ட சட்டையை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் பள்ளி ஒன்றில் ஏழு பிள்ளைகள் உட்பட குறைந்தது 13 பேரைச் சுட்டுக் கொன்றார். தாக்குதலில் 21 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தோரில் 14 சிறுவர்களும் அடங்குவர்.
தாக்குதல்காரர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தலைநகர் மாஸ்கோவிற்கு சுமார் 970 கிலோமீட்டருக்கு அப்பால் நிகழ்ந்தது. தாக்குதல்காரரின் அடையாளமும் தாக்குதலை மேற்கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை.
தாக்குதலை 'மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வகைப்படுத்தினார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய அதிபர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதாக கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.