பேங்காக்: போதைப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோரிடையே கஞ்சா பயன்பாட்டை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் அனுட்டின் சார்ன்விராக்குல் கூறியுள்ளார்.
"அவர்களின் மனப்பான்மையை மாற்றுவது எங்கள் நோக்கமல்ல," என்று அவர் குறிப்பிட்டார். தாய்லாந்தின் துணைப் பிரதமருமான திரு அனுட்டின், அந்நாட்டில் கஞ்சா தொடர்பிலான சட்டம் வரையப்பட்டதில் முன்னணி வகித்தவர்.
மருத்துவ ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் கஞ்சாவைப் பயன்படுத்த வகைசெய்யுமாறு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது திரு அனுட்டினின் கட்சி, இயக்கம் ஒன்றை நடத்தியது. தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சா விலக்கப்பட்டது.
"இதை சாதித்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்," திரு அனுட்டின் கூறினார்.
கஞ்சாவின் தவறான அம்சங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் அதனால் தாய்லாந்து மக்களும் பலனடைவர், சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கு வருவாயும் கிட்டும் என்று திரு அனுட்டின் சொன்னார்.
தாய்லாந்தில் கஞ்சா தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது பிற நாடுகளின் அரசாங்கங்கள் உட்பட சில தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இதன் தொடர்பில் தாய்லாந்தின் அணுகுமுறையைப் பற்றித் தெரிந்துகொள்ள மலேசிய அரசாங்கம் ஆர்வம் காண்பித்துள்ளது. அதன் கஞ்சா சட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்ள மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
'கஞ்சா தடை உள்ள நாடுகளைச் சேர்ந்தோரிடம் விளம்பரம் செய்ய எண்ணம் இல்லை'

