ஜகார்த்தா: முதன்முறையாக இந்தோனீசியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது, மருந்துகளைப் பெற யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலையை இந்தோனீசியா அடைந்துள்ளதைக் குறிப்பதாக அமைப்பு கூறியது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்தே உள்ளூரில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை ஜகார்த்தா வலியுறுத்தி வந்தது. எனினும், சீனாவின் சினோவேக், மேற்கத்திய நாடுகளில் உருவான மொடர்னா, ஃபைசர் தடுப்பூசிகளையே இந்தோனீசியா தற்போது சார்ந்திருக்கிறது.
இந்தோனீசியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தோவேக் தடுப்பூசியை அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான 'பயோ ஃபார்மா' மருந்து நிறுவனமும் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 'பெய்லர்' மருத்துவக் கல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தோனீசியாவில் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரும் இந்தோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசியாக இந்தோவேக்கைப் பயன்படுத்துவதற்கான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.