பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ், தமது பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மக்களைத் தயார்படுத்த அதிகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் பிபிசிக்கு அளித்த பேட்டியின்போது தமது திட்டம் சரியே என்று அதை அவர் தற்காத்துப் பேசினார்.
சில வாரங்களுக்கு முன்னர்தான் பதவி ஏற்ற திருவாட்டி டிரசின் தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கம் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை வெளியிட்டது.
அதன் பகுதியாக உயர்ந்த சம்பளக்காரர்களுக்கு வரிவிகிதத்தைக் குறைத்து அரசாங்கக் கடனை அதிகரிப்பது திட்டத்தின் நோக்கம். பொருளியல் நிபுணர்களும் முதலீட்டாளர்களும் குறைகூறிய
அந்தத் திட்டம், பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு மிகவும் குறைந்தது. பங்குப் பத்திரச் சந்தையில் வீழ்ச்சியைத் தடுக்க தலையிட்டும் பெரிய பயன் இல்லை.
ஆனால் தமது திட்டம் நீண்டகால நோக்கில் வளர்ச்சியை உண்டாக்கும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளிக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும், உயர் சம்பளக்காரர்களுக்கான கூடுதல் வரியை அகற்றும் முடிவை முன்கூட்டியே தமது அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று திருவாட்டி டிரஸ் ஒப்புக்கொண்டார்.
ஆளும் பழமைவாதக் கட்சியின் நான்கு நாள் மாநாட்டுக்கு முன்னர் திருவாட்டி டிரசின் பேட்டி வெளிவந்துள்ளது.
அந்த மாநாட்டில் திருவாட்டி டிரஸ் பெரும் குறைகூறலுக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு சரிந்துள்ளது.