லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்ட இந்தியா வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டு
கிடக்கக் காணப்பட்டனர்.
கடத்தப்பட்டதற்கு இரண்டு நாள் கழித்து புதன்கிழமை இவர்கள் மாண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் பயந்ததுபோலவே நடந்து விட்டது," என்று கலிஃபோர்னியா மாநிலத்தின் மெர்சட் நகர காவல் துறை அதிகாரி செர்னன் வார்ன்கே புதன் இரவு குறிப்பிட்டார்.
மாண்டவர்கள் ஜஸ்தீப் சிங், 36, அவரின் மனைவி ஜஸ்லீன் கோர், 27, இந்தத் தம்பதியரின் எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, இவர்களின் உறவினர் அமன்தீப் சிங், 39, ஆகியோர் என காவல்துறை உறுதிப்படுத்தியது.
இந்தக் குடும்பம் மெர்சட் நகரில் வாகன வர்த்தகம் நடத்தி வந்தது. வர்த்தகக் கட்டடத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் இவர்கள் நால்வரும் கடத்தப்படுவது பதிவாகி இருந்ததாக காவல் துறை அலுவலகம் குறிப்பிட்டது.
ஆயுதந்தாங்கிய மர்ம ஆடவர் ஒருவர் இந்த நால்வரையும் பலவந்தமாக வாகனம் ஒன்றில் ஏற்றியதும் இவர்களில் இருவரின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததும் அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஜீசஸ் மேனுவல் சல்காடோ, 48, என்
பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மெர்செட் நகரின் வடமேற்கே 8 மைல் தூரத்தில் இருக்கும் அட்வாட்டர் என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது இந்த ஆடவர் பிடிபட்டார். உயிரிழந்தோரில் ஒருவரின் ஏடிஎம் அட்டை அட்வாட்டர் பகுதியில் பயன்படுத்தப்பட்டதை துப்பறியும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
"அதிகாரிகள் தொடர்புகொள்ளும் முன்னரே அந்த ஆடவர் தற்கொலைக்கு முயன்றார். அதனைத் தொடர்ந்து மருத்துவ
மனையில் மயக்கநிலையில் காணப்பட்டார்," என்று ஷெரிஃப் வார்ன்கே கூறினார்.
இவருக்கும் மாண்ட குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மயக்கம் தெளிந்த பின் விசாரணை நடத்த அதிகாரிகள் முயலும்போதெல்லாம் அந்த ஆடவர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்
வதாகவும் அவர் 2015ஆம் ஆண்டு முதல் பரோலில் வெளியில் இருந்துவருவதாகவும் வார்ன்கே கூறினார். மேலும், இவருடன் மேலும் ஒருவர் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாண்ட நால்வரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பிண்டி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என ஊடகங்கள் கூறின.
தற்கொலைக்கு முயன்ற ஆடவரிடம் விசாரணை; மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம்