பேங்காக்: தாய்லாந்தில் அதிகமான குழந்தைகள் உட்பட 38 பேரைக் கொன்ற ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பான்யா காம்ராப், 34, என்னும் அந்த ஆடவர் நா வாங் என்னும் காவல்நிலையத்தில் காவலராக இருந்தவர். போதைப்பொருள் தொடர்பான காரணங்களுக்காக கடந்த ஆண்டு வேலையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், உதாய் சவான் மாவட்டத்தில் உள்ள பாலர் பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிற்பகலில் துப்பாக்கியுடனும் கத்தியுடனும் நுழைந்த அவர் அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். தமது குடும்பத்தினரையும் கொன்ற அவர் பின்னர் தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டார்.
தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை நேற்றுக் காலை 38க்கு அதிகரித்தது. இவர்களில் 24 பேர் குழந்தைகள். கொலையாளியின் குழந்தையும் இறந்துவிட்டது.
கொலையாளி போதைப்
பொருள் உட்கொண்டிருந்ததோடு மன உளைச்சலில் இருந்தது விசாரணையில் தெரியவரும் என்று காவல்துறை எதிர்பார்ப்பதாக தேசிய காவல்துறைத் தலைவர் டேம்ரோங்சாக் கிட்டிபிரபாட் கூறினார்.
மேலும், இதுபோன்ற படுபாதகச் செயல்களுக்கு மூலகாரணமாக விளங்கும் போதைப்பொருள்களை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சிகளில் தமது படை ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்தச் சம்பவம் மூலம் காவல்துறை பாடம் கற்றுக்கொண்டு உள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடந்தால் அதனை எப்படி முறியடிப்பது என்பதோடு போதைப்பித்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் துறை கற்றுணர்ந்து உள்ளது," என்றார் அவர்.
இதற்கிடையே, படுகொலைச் சம்பவம் நிகழ்ந்த பள்ளியின் படிக்கட்டுகளில் ஒற்றை வெள்ளை ரோஜாவை வைத்து பெற்றோர்களும் பொதுமக்களும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
சில தாய்மார்கள் துக்கம் தாளாமல் தங்களது குழந்தையின் உடைமைகளை வைத்து அழுதுகொண்டு இருந்தனர்.

