பெய்ஜிங்: உக்ரேனில் மோசம் அடைந்துவரும் நிலவரம் குறித்து தான் கவலைக்கு உள்ளாகியிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவையும் அதனுடன் சேர்க்கப்பட்ட கிரைமியா பகுதியையும் இணைக்கும் கெர்ச் ஸ்ட்ரெய்ட்ஸ் பாலத்தைக் கடந்த வார இறுதியில் உக்ரேன் தாக்கியது. அதற்குப் பதிலடியாக ரஷ்யா உக்ரேனில் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளின்மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது.
உக்ரேனில் உருவெடுத்துள்ள இந்தச் சூழல் சீனாவுக்குக் கவலை தருவதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"பதற்றத்தைத் தணிப்பதில் தொடர்ந்து ஆக்ககரமான முறையில் பங்காற்ற பெய்ஜிங் அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து செயல்படத் தயாராய் இருக்கிறது," என்றும் திருவாட்டி மாவ் நிங் கூறினார். அவர் மேல்விவரங்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளுடன் மாஸ்கோ பேச்சுவார்த்தை நடத்தத் தயாராய் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை நடத்த திட்டவட்டமாக யாரும் முன்வரவில்லை என்று அவர் சொன்னார்.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராய் உள்ளதாகவும் ரஷ்யாதான் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுவது பொய் என்று ரஷ்ய அரசாங்கத்தின் ஒளிவழியுடன் நடந்த நேர்காணலில் திரு லாவ்ரோவ் கூறியிருந்தார்.
உக்ரேன் நிலவரம் தொடர்பில் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் மெய்நிகர் முறையில் சந்திப்பு நடத்தின. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து உக்ரேன் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஜி7 நாடுகளிடம் ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களை வழங்குமாறு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு மேலும் உதவினால் தகுந்த பதிலடி தரப்படும் என்று ரஷ்யா முன்னதாக எச்சரித்திருந்தது,
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் மாண்டனர். உக்ரேனின் எரிசக்தி, ராணுவக் கட்டமைப்புகள் மீதும் ரஷ்யா நேற்று தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

