கோலாலம்பூர்: மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்கு விலைகளும் ரிங்கிட் மதிப்பும் குறைந்தன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதையடுத்து அந்நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 'கேஎல்சிஐ' எனும் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பங்கு விலை 1.6 விழுக்காடு வரை குறைந்தது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.5 விழுக்காடு குறைந்தது.
மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் வர்த்தகச் சந்தையில் சாதகமாகப் பார்க்கப்படும் என்று 'சிஜிஎஸ்-சிஐஎம்பி' அமைப்பின் மலேசிய ஆய்வுப் பிரிவுக்கான தலைவர் ஐவி இங் குறிப்பு ஒன்றில் கூறினார்.
அதே வேளையில், தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகி அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைச் செயல்படுத்தமுடியாத சூழல் உருவாகும் சாத்தியம் உள்ளது.
இதனால் 'கேஎல்சிஐ' பங்குச் சந்தையில் பலர் பங்குகளை விற்கும் நிலை ஏற்படலாம்.
தேர்தல் தொடர்பில் நிலவும் தெளிவற்ற சூழல், உலகளவில் பொருளியல் சுருங்குவது ஆகிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு பங்குச் சந்தையைப் பொறுத்தவரை கவனமாக நடந்துகொள்ளுமாறு திருவாட்டி இங் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மலேசிய பொதுத் தேர்தல் தொடர்பிலான தெளிவற்ற சூழலால் ரிங்கிட் சற்று வலுவிழக்கக்கூடும் என்று சிங்கப்பூரில் உள்ள 'ஸ்கோட்டியாபேங்க்' வங்கியின் அந்நியச் செலாவணி உத்தி அதிகாரியான திரு சீ காவ் எச்சரித்தார்.

