கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ்வைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து நேற்று தாக்குதல்களை நடத்தியது.
கியவ்வுடன் சேர்த்து 40க்கும் அதிகமான நகரங்களை ரஷ்ய ஏவுகணைகள் பதம் பார்த்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் வான்வழித் தற்காப்பை வலுப்படுத்துவது குறித்து நேட்டோ கூட்டணி நாடுகள் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் கூடி கலந்துரையாடின.
அத்துடன் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு உதவும் வகையில் கூடுதல் ராணுவ உதவியை வழங்க அவை முடிவெடுத்தன.
இதையடுத்து, உக்ரேனுக்கு உதவினால் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரேனை நேட்டோவில் இணைத்துக்கொண்டால் மூன்றாவது உலகப் போருக்கு அது காரணமாகிவிடும் என்றும் ரஷ்யா கூறியது. தனது பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்கவே உக்ரேனுக்கு எதிராகப் படையெடுத்துள்ளதாக அது தெரிவித்தது. இதற்கிடையே, நட்பு நாடான உக்ரேனின் ஒவ்வொரு நிலப்பகுதியும் தற்காக்கப்படும் என்று
அமெரிக்கா அண்மையில்
சூளுரைத்தது.
உக்ரேனைத் தற்போது தன்னுடன் சேர்த்துக்கொண்டால் நிலைமை மோசமாகி அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்திவிடும் என்று கருதும் நேட்டோ, உக்ரேனின் விண்ணப்பம் குறித்து முடிவெடுப்பதை ஒத்திவைத்துள்ளது.

