மெல்பர்ன்: தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான வீடுகள் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நாசப்படுத்தப்பட்டுள்ளன. மிகுந்த கவலையுடன் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் வெள்ளம் குறித்த பெரிய அளவிலான அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தின் தலைநகர் மெல்பர்னில் உள்ள மரிபெர்னோங் பகுதியில் நீரின் அளவு விரைவில் உயர்ந்ததைத் தொடர்ந்து பலர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
குடியிருப்பாளர்கள் சிலரை மீட்புப் பணிகளுக்கான காற்றடைத்த படகுகளில் மீட்க வேண்டியிருந்தது. இங்கு சாலைகளில் இருந்த சில வாகனங்கள் நீரில் கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கின.
விக்டோரியா மாநிலத்தில் 500 வீடுகள் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் டேனியல் ஆண்டுரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 500 வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததாகவும் அவசரச் சேவைகள் அவற்றை சென்றடைய முடியாத நிலை உருவானதாகவும் அவர் கூறினார்.
இந்த எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

