நோம்பென்: கம்போடிய படகு விபத்தில் 11 சிறார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, படகு உரிமையாளர்கள் இருவரையும் படகை இயக்கிய 15 வயது நபரையும் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஆங்கில வகுப்பு முடிந்து மாணவர்கள் படகில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மெக்கோங் ஆற்றில் படகு மூழ்கியது.
மாணவர்கள் 12லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்நிலையில், விபத்து தொடர்பில் விசாரணைக்காக மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்தார். அந்த மூவரும் கண்டல் மாநில காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அங்கு அவர்கள்மீது எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும். இதற்கிடையே, மரண எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ள வேளையில், விபத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியை அதிகாரிகள் நேற்றுக் காலை நிறுத்திக்கொண்டனர்.

