சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். விக்டோரியாவின் தலைநகர் மெல்பர்னும் அவர் போன இடங்களில் அடங்கும்.
கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே இவ்வாண்டின் தொடக்கத்தில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. 'லா நினா' பருவநிலை நிகழ்வால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து மூன்று முறை மோசமான பருவநிலையை எதிர்கொண்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வாழ்வோர், நகர்ப்பகுதிகளுக்கு அப்பால் வாழும் சமூகத்தினர் ஆகிய இரு தரப்பினரும் மோசமான பருவநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு அல்பனீஸ் கூறினார். மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றவும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 60 ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

