வாஷிங்டன்: உக்ரேனிய நகரங்களின் பொதுமக்களுக்கான கட்டமைப்புகள்மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து ஏற்கெனவே மோசமான உக்ரேனின் பொருளியல் மேலும் பாதிக்கப்படும் என்று உலக வங்கியின் உயரிய அதிகாரியான அனூப் பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார். அதோடு, ரஷ்ய தாக்குதல்களால் உக்ரேனில் இவ்வாண்டு வறுமை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உக்ரேனின் எரிசக்தி நிலையங்கள்மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. அதனால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகம் விரைவிலேயே சீராக்கப்பட்டது.
அது, உக்ரேனின் போர்க்காலத் தயார்நிலையை எடுத்துக்காட்டுவதாக உலக வங்கியின் வட்டார நாட்டு இயக்குநரான திரு பேனர்ஜி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் சொன்னார். எனினும், ரஷ்யாவின் போர் உத்திகள் மாறியுள்ளதால் அபாயங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

