ஆக்ரா (கானா): ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் உணவை இறக்குமதி செய்வோர் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.
உலக நாடுகள் மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அத்துடன் டாலரின் மதிப்பு கணிசமாகக் கூடியுள்ளதால் உணவின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதனால் இந்நிலை உருவாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று உணவை இறக்குமதி செய்வோர் தெரிவித்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானின் துறைமுகங்களில் உணவு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் ஏற்றுமதியாகாமல் தேங்கிக்கிடக்கின்றன.
எகிப்தில் தனியார் ரொட்டி கடைக்காரர்கள் ரொட்டி விலையை உயர்த்தினர். எல்லைப் பகுதிகளில் கோதுமை சிக்கிக்கொண்டதால் மாவு ஆலைகளில் அதற்கான பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் எகிப்தில் ரொட்டி விலை கூடியது.
அதிக வட்டி விகிதம், உயர்ந்துவரும் டாலரின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உணவு இறக்குமதியை நம்பியிருக்கும் பல உலக நாடுகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
எனினும், டாலரின் மதிப்பால் பிரச்சினை எழவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். உலகின் இதர பகுதிகளில் காணப்படும் வலுவற்ற வளர்ச்சி, செயல்படுத்தப்பட்ட தவறான திட்டங்கள் ஆகியவையே உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்று அவர் சொன்னார்.
"டாலரைப் பற்றி எனக்கு அச்சம் ஏதும் இல்லை. உலகின் இதர பகுதிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன்," என்று திரு பைடன் அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் முயற்சியில் பெரிய அளவில் இறங்கியதைத் தொடர்ந்து டாலரின் மதிப்பு இவ்வாண்டு சுமார் 15 விழுக்காடு கூடியுள்ளது.
மேலும், பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் முதலில் வரைந்த பொருளியல் திட்டம் பங்குச் சந்தைகளில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும் திரு பைடன் குறிப்பிட்டார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதால் துறைமுகங்களில் உணவு தேங்கியுள்ளது

