டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் எவின் எனும் சிறைச்சாலையில் மூண்ட தீயால் குறைந்தது நான்கு கைதிகள் மாண்டனர் என்றும் 61 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான 'ஐஆர்என்ஏ' ஊடகம் தெரிவித்துள்ளது. 51 பேர் வெளிநோயாளி சிகிச்சை பெறுவதாகவும் 'ஐஆர்என்ஏ' கூறியது.
மாண்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் சில தகவல்கள் வெளியாயின. சம்பவம் பதிவான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டன. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் அரசியல் கைதிகள், இருநாட்டு குடியுரிமை உள்ளவர்கள் ஆகியோரில் பலர் இந்த சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவலில் இருந்தபோது மஹ்சா அமினி எனும் 22 வயது குர்தியப் பெண் மாண்டதைத் தொடர்ந்து ஈரானில் கடந்த சுமார் ஒரு மாதமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. ஆர்ப்பாட்டங்களையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆகக் கடைசி நிலவரப்படி ஆர்ப்பாட்டங்களுக்கும் எவின் சிறைச்சாலை தீக்கும் தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை.

