பாகான் டத்தோ: எதிர்வரும் மலேசியப் பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் பிரதமர் வேட்பாளராக தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் போட்டியிடுவார் என்று அம்னோவின் தலைவர் அகமது ஸாஹிட் அமிடி தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றாலும் இந்த நிலைப்பாடு மாறாது என்றார் அவர்.
அம்னோ வெற்றி பெற்றால் திரு இஸ்மாயில் பிரதமர் பொறுப்பேற்பது சந்தேகம் என்று எதிர்க்கட்சிகள் பொய்த் தகவல்கள் பரப்புகின்றன என்று திரு ஸாஹிட் சாடினார்.
"இஸ்மாயில் சப்ரிதான் எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர். இதுவே அம்னோ உச்ச மன்றம் எடுத்திருக்கும் இறுதி முடிவு.
"அம்னோ கட்சியினருக்கு இடையிலும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இடையிலும் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் சில எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றன.
"எங்களைப் பற்றி குறை சொல்ல எதுவும் இல்லாததால் இத்தகைய உத்தியை அவை கடைப்பிடிக்கின்றன," என்று பாகான் டத்தோ அம்னோ பிரிவைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் திரு ஸாஹிட் கூறினார்.
இதற்கு முன்பு, தேசிய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் திரு ஸாஹிட் பிரதமராகப் பதவி வகிப்பார் என்ற பேச்சு நிலவியது.
இந்நிலையில், பள்ளிப் பருவத்திலிருந்து திரு ஸாஹிட்டை நன்கு தெரியும் என்றும் தங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் திரு இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.
"நாங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். நாங்கள் பிரிய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம். அவ்வாறு நிகழ்ந்தால் எதிர்க்கட்சிகளுக்கு லாபம்.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வாகை சூட, நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறுவதை நம்பினால் தோல்வியின் பிடியில் சிக்கிக்கொள்வோம்," என்று தமது கட்சியினரிடம் திரு இஸ்மாயில் கூறினார்.
அதே சமயம் அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்படக்கூடாது என்றார் அவர். எதிர்காலத்தில் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாக திரு இஸ்மாயில் தெரிவித்தார்.
ஒருவரையொருவர் தூற்றிக்கொள்ளக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இரு கட்சிகளும் முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியில் ஒன்றாகச் செயல்பட்டதை அவர் நினைவு
படுத்தினார்.

