மூவார்: ஜோகூர் மாநிலத்தின் மூவார் நகரத்தில் மூடா கட்சி நேற்று முன்தினம் மாலை பிரசாரம் நடத்தியது.
அதில் அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சயீது சாதிக் சயீது அப்துல் ரஹ்மான் பேசியபோது இளையர்கள் சிலர் இடையூறு விளைவித்தனர். கறுப்பு ஆடைகள் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்தக் கும்பல், திரு சயீது சாதிக் பேசுவதைத் தடுத்து நிறுத்த முயன்றது. பிரசாரக் கூட்டம் தொடங்கியதிலிருந்து அந்தக் கும்பல் அங்கு இருந்தது. ஆனால் திரு சயீது சாதிக் பேசத் தொடங்கியதும் அவரைத் தூற்றும் வகையில் அந்தக் கும்பல் முழக்கமிட்டது.
அதுமட்டுமல்லாது, பிரசார மேடையில் ஏற அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் முயன்றதால் அவ்விடத்தில் பதற்றம் நிலவியது.
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளும் மூடா கட்சியினரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
மேடை மேல் ஏற முடியாமல் போனதைத் தொடர்ந்து, பிரசாரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை மிக சத்தமாக அவர்கள் இயக்கினர்.
இருப்பினும், காவல்துறை அதிகாரிகள் அங்கு இருந்ததால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

