பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
அதற்கு முன்பாகவே வாக்காளார்களை ஈர்க்கும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
வெளிநாடுகளில் அல்லது வேறு மாநிலங்களில் இருக்கும் மலேசிய வாக்காளர்களைத் தங்கள் சொந்த தொகுதிக்குத் திரும்பி வாக்களிக்குமாறு அரசியல் கட்சிகளும் அரசு சார்பற்ற அமைப்புகளும் ஊக்குவிக்கின்றன.
தேர்தலில் வாக்களிக்க வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்
களால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதுமட்டுமில்லாது, வாக்களிப்பு மையங்களுக்கு வாக்காளர்களை அழைத்துச் செல்ல கார் பகிர்வுத் திட்டத்தையும் அவை வழங்குகின்றன.
தேர்தல் ஆண்டிறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது மலேசியாவில் பருவமழைக்காலம் என்பதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டாலும் பயணம் செய்யக்கூடிய 'ஃபோர் வீல் டிரைவ்' வாகனங்களுக்கு ஏற்பாடு செய்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக வாக்காளர்கள் பலரால் வாக்களிப்பு மையங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வாக்களிக்க வருமாறு முந்திய தேர்தல்களில் எதிர்க்கட்சிகள்
மட்டுமே அழைப்பு விடுக்கும். இம்முறை பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணியும் அப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
பினாங்கு மாநிலம் எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அம்மாநிலத்தின் தேசிய
முன்னணி தலைவர் மூசா ஷேக் ஃபாட்சிர் இருக்கிறார்.
தனது மகளிர் அணிக்குச் சொந்தமான தொலைபேசி அழைப்பு மையங்கள், சமூக ஊடகம் ஆகிய யவை மூலம் வாக்காளர்களுடன் தொடர்புகொள்ள பினாங்கு தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் கல்வி பயிலும், வேலை செய்யும் மலேசியர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யத் தேவையான அனைத்தையும் செய்வதாக பாஸ் கட்சியின் இளையர் அணித் தலைவர் அகமது ஃபாட்லி ஷாரி கூறினார். சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாது, பிரசாரம் செய்ய மலேசியர்கள் அதிகம் இருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டுக்கும் தமது கட்சிப் பிரதிநிதிகளை அனுப்ப இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்காளர்களைச் சென்று சந்திப்பதாகவும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல சரியான, தரமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்களிடம் அவர் வலியுறுத்துவதாகவும் கெடா
மாநிலத்தின் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
அனைத்து சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக வாக்காளர்களுடன் தமது கட்சி தொடர்புகொண்டு பிரசாரம் செய்வதாக மூடா கட்சியின் ஊடகத் தொடர்புத் தலைவர் லெபன் சித்தார்த் கூறினார்.
இதற்கிடையே, முன்பு போல தேர்தல்களில் எளிதாக வெற்றி பெற முடியாது என்று மலேசியப் பிரதமரும் அம்னோவின் உதவித் தலைவருமான திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
எனவே, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"காலம் மாறுகிறது. நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது. இதை 14வது பொதுத் தேர்தல் எங்களுக்கு உணர்த்தியது," என்று அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணியை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தோற்கடித்து ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்தது.
இருப்பிலும், பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சி தாவியதால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது. 2020ஆம் ஆண்டில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், மலேசியர்கள் விரும்பினால், தேவை ஏற்பட்டால் மூன்றாவது முறையாக மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்கத் தயாராக இருப்பதாக 97 வயது டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
டாக்டர் மகாதீர் தனது லங்காவி தொகுதியைத் தற்காத்து தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

