பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடிநுழைவு சட்டங்களைக் கடுமையாக்க அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமி காணாமல்போனதாக புகார் அளிக்கப்பட்டது. அன்று மாலை, சிறுமியின் சடலம் அடைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்று சிறுமியின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் பல வெட்டுக்காயங்கள் இருந்தன. அவள் மூச்சு திணறி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தின் தொடர்பில் 24 வயதான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு சட்டவிரோதமாக வந்ததாக நம்பப்படுகிறது.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் பல குற்றங்களைப் புரிவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அரசாங்கத்தால் இவர்களை நாடு கடத்த இயலவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர் குறைகூறுகின்றனர். சட்ட ஒழுங்கை கட்டிக்காக்க அரசாங்கம் தவறிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.


