சிங்கப்பூரிலிருந்து வாக்களிக்க வரும் மலேசியர்களைத் தடுக்க முயல்வதாக வெளியான தகவல்
ஜோகூர் பாரு: பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வரும் மலேசியர்களைத் தடுக்கும் முயற்சியாகவே ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் தானியக்கக் கதவு மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறுவதாக வெளியான தகவலை ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி மறுத்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே பயணம் செய்வதை எளிதாக்கவே ஜோகூர் அரசாங்கம் விரும்புகிறது என்று திரு ஹஃபிஸ் குறிப்பிட்டார்.
மாறாக, ஜோகூர் பாரு சோதனைச்சாவடி கடப்பிதழ் அனுமதிக்கான தானியக்கக் கதவுகளைச் செயல்படாமல் முடக்கும் நடவடிக்கையின் பின்னணியில் அம்னோ இருப்பதாகக் கூறுவது பொய்யான தகவல் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தேர்தலில் வாக்களிக்க நாடு திரும்புவதைத் தடுக்கும் விதமாக, பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு சோதனைச்சாவடியில் உள்ள தானியக்கக் கதவுகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து, அம்னோ கீழ்த்தரமான தந்திரங்களில் ஈடுபடுகிறது என்று சமூக ஊடகமொன்றில் வெளியான ஒரு பதிவு குற்றம் சாட்டியிருந்தது.
தானியக்கக் கதவுகளை முடக்கிவைப்பதன்மூலம், கடப்பிதழ் அனுமதி பெற குடிநுழைவு, சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும் என்று அப்பதிவு குறிப்பிட்டிருந்தது.
அதுபற்றிக் கேட்டதற்கு, இருநாடுகளுக்கு இடையே மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது என்ற முதல்வர் ஹஃபிஸ், தானியக்கக் கதவுகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் சிங்கப்பூரிலிருந்து மலேசியர்கள் நாடுதிரும்புவது தடுக்கப்படும் என்ற தகவலையும் அடியோடு மறுத்தார்.
ஜோகூர் சட்டமன்ற உறுப்பினரான முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலேவும் முதல்வர் ஹஃபிஸின் கருத்தை எதிரொலித்தார்.
"தானியக்கக் கதவுகளை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த மே மாதமே தொடங்கிவிட்டன. அவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெறும். இந்த மேம்பாட்டுப் பணிகள்மூலம் தானியக்கக் கதவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்," என்று திரு சாலே விளக்கினார்.
அப்பணிகளுக்கும் பொதுத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் சொன்னார்.
தாம் முதல்வராகப் பதவியேற்றபோது ஜோகூர் பாரு குடிநுழைவு, சோதனைச்சாவடியில் 1,200 வேலை உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருந்தன என்றும் இப்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறாகக் குறைந்துவிட்டது என்றும் முதல்வர் ஹஃபிஸ் தெரிவித்தார்.
ஆசியாவின் பரபரப்பான குடிநுழைவு, சோதனைச்சாவடிகளில் ஒன்றான ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் மேம்பாட்டுப் பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

