கியவ்: ரஷ்யா இணைத்துக்கொண்ட கெர்சானை நோக்கி உக்ரேனியப் படைகள் முன்னேறிச் செல்லும் நிலையில் அங்குள்ள ஒரு நீர்மின் அணையைத் தகர்க்க ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.
கக்கோவோ நீர்மின் நிலையத்தைத் தகர்க்கும் நோக்கில் ரஷ்யப் படைகள் அங்கு வெடிவைத்துள்ளன என்றும் அதனால் பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் உக்ரேனியப் பிரதமர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.
அணை தகர்க்கப்பட்டால் லோவர் டினிப்ரோ ஆற்றோரமாக வசிக்கும் நூறாயிரக்கணக்கான மக்கள் வெள்ள அபாயத்தில் சிக்குவர் என்று ஐரோப்பியத் தலைவர்களுக்குமுன் நேற்று உரையாற்றியபோது திரு ஸெலன்ஸ்கி அச்சம் தெரிவித்தார்.
தெற்கில் நீர் விநியோகத்தை நிறுத்தினால் ஐரோப்பாவின் ஆகப் பெரிய ஸப்போரிஸியா அணுமின் நிலையத்தின் குளிர்விப்பு அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, உக்ரேனிய நகரங்கள் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தொடங்கி உள்ளன. தொழில் நிறுவனங்களும் மக்களும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் மின்கட்டமைப்புமீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பின் மேலும் பலர் அகதிகளாக வெளியேறக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

