காபூல்: ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பிருந்த ஆறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரைத் தனது படைகள் கொன்றுவிட்டதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் 30ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல்காரர் ஒருவர் தலைநகர் காபூலில் உள்ள 'காஜ்' எனும் கல்வி நிலையத்தில் பெண்களுக்கு அருகே வெடிகுண்டைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது கல்வி மண்டபத்தில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நூற்றுக்கணக்கான மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். அங்கு ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டிருந்தனர்.
தாக்குதலில் 46 பெண்கள் உட்பட குறைந்தது 53 பேர் மாண்டனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.
எந்த அமைப்பும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
எனினும், 'காஜ்' கல்வி நிலையத் தாக்குதல் உட்பட பொதுமக்களுக்கு எதிரான பல தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் காரணம் என்று தலிபான் நேற்று கூறியது.

