ஜகார்த்தா: இந்தோனீசியாவில் முதன்முறையாக சமூக அளவில் எக்ஸ்பிபி வகை ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவில் இருக்கும் சுரபாயா நகரில் 29 வயது பெண்ணுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
சென்ற மாதம் 26ஆம் தேதியன்று அப்பெண்ணுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்ததென இந்தோனீசிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் முகம்மது சியாரில் தெரிவித்தார். சுரபாயாவில் தனிமையில் இருந்த அப்பெண் இம்மாதம் மூன்றாம் தேதியன்று குணமடைந்ததாகவும் அவர் கூறினார்.
எக்ஸ்பிபி வகை ஓமிக்ரான் கிருமியால் சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடியதையும் டாக்டர் சியாரில் சுட்டினார். எனினும். எக்ஸ்பிபி வகை கிருமிக்கு வேகமாகப் பரவும் ஆற்றல் இருந்தாலும் இதர ஓமிக்ரான் வகை கிருமிகளைப் போலவே மரணம் விளைவிக்கும் தன்மை அதனிடம் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.

