இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதன் தொடர்பில் கூடுதலாகக் கண்காணிக்கப்படும் அனைத்துலக நாடுகள் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளது. 'எஃப்ஏடிஎஃப்' எனும் நிதி நடவடிக்கை செயற்குழுவின் தலைவர் டி. ராஜ குமார் நேற்று முன்தினம் இதைத் தெரிவித்தார்.
பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தானுக்கு இந்த முடிவு, பிறரிடையே அந்நாட்டைப் பற்றிய கருத்தை மேம்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற இரண்டு நாள் சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திரு குமார் கூறினார்.
"கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் செயல்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க வகைசெய்யும் முறைகள் ஆகியவற்றில் இருந்த குறைபாடுகளை ஆராய பாகிஸ்தானிய அதிகாரிகள் இரண்டு தனிப்பட்ட செயற்திட்டங்களை ஆராய்ந்ததுடன் தேவையான 34 நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்," என்று திரு குமார் பாரிசில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

