கியவ்: உக்ரேனின் மேற்குப் பகுதியில் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. உக்ரேனின் தேசிய மின்சார விநியோகிப்பு நிறுவனமான உக்ரெனெர்கோ இதைத் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர். மேற்கு உக்ரேனின் முக்கிய மின்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரெனெர்கோ சமூக வலைத்தளங்களில் தெரிவித்தது.
தாக்குதலால் ஏற்பட்ட சேதம் இம்மாதம் 10லிருந்து 12ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நேர்ந்த சேதத்தைவிடவும் மோசமாக இருக்கலாம் என்றும் உக்ரெனெர்கோ குறிப்பிட்டது.
இம்மாதம் 10ஆம் தேதியன்று பல உக்ரேனிய நகரங்கள்மீது ரஷ்யா 80க்கும் அதிகமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கியவ் தெரிவித்திருந்தது.

