பெய்ஜிங்: வரலாறு காணாத வகையில் மூன்றாவது தவணைக்காலத்திற்கு சீனாவின் அதிபராக திரு ஸி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் தமது அரசியல் கூட்டாளிகளைத் தலைவர்களாக நியமித்துள்ளார்.
திரு ஸி நியமித்துள்ள புதிய உச்சமன்ற ஆட்சிக் குழுவில் ஏழு ஆண்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் நால்வர் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள். அனைவரும் திரு ஸியின் அரசியல் கூட்டாளிகள். எதிர்பாராவிதமாக துணைப் பிரதமர் ஹு சுன்ஹுவா ஆட்சிமன்றக் குழுவில் நியமிக்கப்படவில்லை.
அவர் பதவி உயர்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திரு ஸிக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலைக்கு ஷாங்காய் நகருக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு லி சியாங் உயர்த்தப்பட்டது மற்றோர் எதிர்பாரா நிகழ்வு. அவரே சீனாவின் அடுத்த பிரதமராகப் பதவி வகிப்பார் எனக் கூறப்படுகிறது. ஷாங்காயில் கொவிட்-19 நிலவரத்தைக் கையாண்டதன் தொடர்பில் திரு லி கண்டனத்திற்கு ஆளானவர்.
முன்னதாக, நாடாளுமன்ற அமர்வு நிறைவடையவிருந்தபோது சீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் எதிர்பாரா வகையில் பெய்ஜிங் மக்கள் அரங்கிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
திரு ஹுவின் உடல்நலம் காரணமாக அவர் அரங்கிலிருந்து வெளியேறியதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் டுவிட்டரில் பதிவேற்றம் செய்த இந்தக் காட்சி பதிவான காணொளி பலரால் பகிரப்பட்டது.
இதற்கிடையே, மூன்றாவது தவணைக்காலத்திற்கு திரு ஸி ஜின்பிங் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

