ஜோகூர் பாரு: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு அண்டை நாடான சிங்கப்பூரில் வேலை செய்யும் அந்நாட்டவர் பலர் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கூட்டத்தைச் சமாளிக்க மலேசியாவின் சட்ட அமலாக்கப் பிரிவுகள், குறிப்பாக குடிநுழைவுப் பிரிவு, தயார்நிலையில் இருக்கும் என்று சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சாலை போக்குவரத்து நெரிசலை சகித்துக்கொள்ள தாங்கள் தயாராய் இருப்பதாக அவர்கள் கூறினர். எனினும், நிலைமையைச் சீராக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் கூடுதல் அதிகாரிகளைப் பணியில் நிறுத்தவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஐந்தாம் தேதியன்று வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் வெய்வர். இரு நாள்களும் சனிக்கிழமைகளில் வருகின்றன.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் உட்லண்ட்சில் உள்ள ஜோகூர் கடற்பாலம் உலகில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எல்லைப் பகுதிகளில் ஒன்று. கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு தினமும் சுமார் 415,000 பேர் ஜோகூர் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு இரண்டையும் கடப்பர்.
இதற்கிடையே, சிறையில் இருக்கும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் இடம்பெற்ற ஒரு காணொளி மலேசியாவின் 'ஆர்டிஎம்' ஒளிவழி ஒன்றில் ஒளிபரப்பானது. திரு நஜிப் சிறைத் தண்டனையை நிறைவேற்றத் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தக் காணொளி நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்றது.
அதற்குப் பதிலளித்த சிறைச்சாலைப் பிரிவு, சிறையில் எந்தக் காணொளியும் பதிவுசெய்யப்படவில்லை என்ற தெரிவித்தது. திரு நஜிப் சிறைத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னரே காணொளி பதிவுசெய்யப்பட்டிருக்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது.

