மணிலா: வட பிலிப்பீன்சை 436 நில அதிர்வுகள் நேற்று உலுக்கின. அதற்கு முந்திய நாள், ரிக்டர் அளவில் 6.4 என பதிவான நிலநடுக்கம் அப்பகுதியை உலுக்கியதில் குறைந்தது 10 பேர் காயமுற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், பழமைவாய்ந்த தேவாலயங்களைச் சேதப்படுத்தியது.
லாவாக் சிட்டியில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெடிப்பு ஏற்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டது. இன்றிரவு அது மீண்டும் திறக்கப்படும்.
அப்ரா மாநிலத்தில் உள்ள தினெக் சிறுநகரில் நிலநடுக்கம் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தெற்கே 330 கி.மீ. தூரத்தில் உள்ள மணிலா மாநகர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் ககாயன் மாநிலத்தின் சில பகுதிகளில் மின்தடையும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் அப்ரா, இலோகோஸ் நோர்ட்டே பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது.
லகாயன் சிறுநகரில் உள்ள வீதிகளில் விரிக்கப்பட்ட பாய்களில் சிறார்கள் படுத்து உறங்கியதைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
இலோகோஸ் நோர்ட்டேயின் ஆகப்பெரிய மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து, நோயாளிகள் வெளியேற்றப்பட்டதுடன் வெளிநோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
உயரமான கட்டடங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

