வாஷிங்டன்: உலகளவில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தற்போதுள்ள 16.7 மில்லியனில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் சுமார் 18.7 மில்லியனாக மெதுவாக அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குளிர்காலம் நெருங்குவதை முன்னிட்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய பகுப்பாய்வில் இந்த முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த குளிர்காலத்தின்போது ஜனவரியில் உச்சம் தொட்ட சுமார் 80 மில்லியன் எண்ணிக்கையைவிட இம்முறை தொற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மரண எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்காது என முன்னுரைக்கப்படுகிறது.
தற்போது உலகளவில் ஏறக்குறைய 1,660ஆக இருக்கும் மரண எண்ணிக்கை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி 2,748ஆக கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் உலகம் முழுவதும் அன்றாடம் 11 மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகின.
அமெரிக்காவில் அன்றாடத் தொற்று மூன்றில் ஒரு பங்கு கூடி ஒரு மில்லியனைத் தாண்டும் என அறிக்கை முன்னுரைத்துள்ளது.
ஜெர்மனியில் அண்மையில் அதிகரித்து வந்த தொற்று உச்சத்தை எட்டிவிட்டதாக அது கூறியது. அங்கு தொற்று மூன்றில் ஒரு பங்கிற்குமேல் குறைந்து, வரும் பிப்ரவரிக்குள் சுமார் 190,000ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியில் கொவிட்-19 அதிகரிக்க ஓமிக்ரான் துணைத் திரிபுகள் பிகியூ.1 அல்லது பிகியூ.1.1 காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அறிக்கை, வரும் வாரங்களில் இவை ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவக்கூடும் என்றது.
2020ல் கொவிட்-19 தலைதூக்கியதற்குப் பிறகு, ஜெர்மனியில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அண்மையில் வேகமாக அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று அறிக்கை கூறியது.
இதற்கிடையே, ஓமிக்ரான் துணைத் திரிபான 'எக்ஸ்பிபி', எளிதில் பரவக்கூடியதாக இருந்தாலும் அது கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக தெரியவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஓமிக்ரானின் பிஏ.5 துணைத் திரிபால் மக்கள் ஏற்கெனவே தொற்றுக்கு ஆளான நிலையில், உலகளவில் 'எக்ஸ்பிபி'யின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

