மலேசியாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் 17வது மாடி சன்னல் ஓரத்தில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளி பார்த்தவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள கூட்டுரிமை வீட்டு ஒன்றில் இச்சம்பவம் நடந்தது.
சன்னல் ஓரத்தில் இரண்டு சிறுவர்கள் ஆபத்து அறியாது விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தை குதித்து விளையாடுகிறது. மற்றொரு குழந்தை சன்னல் ஓரத்தில். அவர்களை கண்காணிக்க பெரியவர்கள் யாரும் அங்கு இல்லை.
இந்தக் காட்சியைக் கண்ட குடியிருப்பாளர் ஒருவர் கட்டட நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
குழந்தைகளுக்கு இரண்டு மற்றும் நான்கு வயது எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது குழந்தைகளின் பெற்றோர் வீட்டில் இருந்ததாக காவல்துறையினர் கூறினர், அவர்களை காவல்துறை விசாரித்து வருகிறது.
குழந்தைகள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், அந்த வீட்டில் சன்னல் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காணொளி ஆயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தவர்கள் பலரும் இந்தக் காணொளி தங்களை திடுக்கிட வைத்ததாக பதிவு செய்தனர்.

