கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி டாம்மி தாமசின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை நினைவுக் குறிப்பு, தேர்தல் விவகாரமாக உருவெடுத்துள்ளது. வன்முறையைத் தூண்டுதல், கலகம் ஏற்படுத்துவது, அவதூறு போன்ற அம்சங்களைக் கொண்டிருந்த நூலுக்குச் சொந்தக்காரர் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் அவரை நியமித்ததற்காக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை தேசிய முன்னணிக் கூட்டணி குறைகூறுகிறது.
இந்நிலையில், தமது நூல் மீது விசாரணை நடத்த பரிந்துரைத்த பணிக்குழுவை அமைத்ததற்காக அரசாங்கத்திற்கு எதிராக திரு தாமஸ் வழக்கு தொடர்கிறார்.
எழுத்துபூர்வ சட்ட அதிகாரத்தின்கீழ் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால் இது சட்டவிரோதமானது என்று அவர் கூறினார்.
2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடித்து பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜூன் மாதம் தலைமைச் சட்ட அதிகாரியாக திரு தாமஸ் நியமிக்கப்பட்டார். மலாய் முஸ்லிம் அல்லாத முதலாவது தலைமைச் சட்ட அதிகாரியாக இருந்த இவர், 2020 பிப்ரவரியில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழும்வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

