புத்திரஜெயா: அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலின்போது வேட்பாளர்கள் யாரேனும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான வாக்காளர்களுக்கான விதிமுறைகளை மலேசியாவின் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
"கிருமித்தொற்றுக்கு ஆளானோருக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இது அவர்கள் வாக்களிக்க வகைசெய்யும். காரணம், வாக்களிப்பது அவர்களின் அரசியல் உரிமை," என்று திரு கைரி செய்தியாளர் கூட்டத்தில் சுட்டினார்.
"கிருமித்தொற்றுக்கு ஆளான வேட்பாளர் தன்னை சில நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், அவர் இணையத்தில் பிரசாரம் செய்யலாம். அதுதான் பொறுப்பான செயல்," என்றும் அவர் குறிப்பிட்டார். கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் பொதுவாக மூன்றிலிருந்து நான்கு நாள்களில் குணமடைவர் என்பதை திரு கைரி தெரிவித்தாார்.
குறுகலான இடங்களில் முகக்கவசம் அணிந்து வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்று திரு கைரி சொன்னார். குறிப்பாக மூத்த குடிமக்கள் இருக்கும்போது அல்லது வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும்போது இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தினத்தன்று வழிமுறைகளை வரைய தேர்தல் ஆணையத்திற்குத் தமது அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக திரு கைரி தெரிவித்தார். மேலும், மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதையொட்டி முகக்கசவம் அணியுமாறு திரு கைரியின் அமைச்சு மக்களிடம் பரிந்துரைத்தது.
மலேசிய பொதுத் தேர்தல்: கொவிட்-19 தொற்று ஏற்பட்ட வேட்பாளர்கள் வாக்களிக்கலாம்

