ஜார்ஜ்டவுன்: சீனப் புத்தாண்டுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்கள் உள்ளன. இருந்தாலும் அதை முன்னிட்டு இப்போதே மீன்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மலேசியாவில் பயனீட்டார்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மலேசியாவில் உள்ள பல்வேறு மீனவர் சங்கங்கள் இந்த அறிவுரையை வழங்குகின்றன. பருவநிலை எதிர்பாரா வகையில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல சிரமப்படுவது அதற்குக் காரணம்.
மலேசியாவில் பொதுவாக ஆண்டிறுதியில் மழைக்காலம் வரும். இப்போது அதற்கு முன்னரே அந்நாட்டில் பருவநிலை மோசமடைவதாக சில மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறைந்துள்ளது.
முன்னதாக வாரந்தோறும் கடலுக்குச் சென்ற மலேசிய மீனவர்கள் இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மீன் பிடிக்கச் செல்கின்றனர். சிலர் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மீன் பிடிக்கப் போகின்றனர்.
மீன் விலை கணிசமாக அதிகரிக்கக்கூடும். அதனால் இப்போதே வாங்கி அவற்றைப் பழைய செய்தித்தாள்களில் சுருட்டி வைக்குமாறு பயனீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி சீனப் புத்தாண்டின் முதல் நாள். அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு பல குடும்பங்கள் கூட்டு இரவு விருந்துக்கு ஒன்றுகூடுவது வழக்கம்.

