புதுடெல்லி: இந்தியாவில் டுவிட்டர் நிறுவனம் அதன் 90 விழுக்காடுக்கும் அதிகமான ஊழியர்களைக் கடந்த வாரயிறுதியில் பணிநீக்கம் செய்தது. இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் டுவிட்டருக்காக பணியாற்றி வந்தனர். பணிநீக்கத்தைத் தொடர்ந்து இப்போது டசன் கணக்கானோரே எஞ்சியுள்ளதாக இந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள் கூறினர்.
இந்தியாவில் குறைக்கப்பட்ட 70 விழுக்காடு வேலைகள் பொருள், பொறியியல் குழுவைச் சேர்ந்தவை.
புதுடெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகர்களில் டுவிட்டர் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
பெரும் செல்வந்தரான எலன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை US$44 பில்லியனுக்கு (S$62பி.) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வாரம் உலகம் முழுவதும் பாதி அளவு ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் டசன் கணக்கானோரை பணிக்குத் திரும்பக் கோரி டுவிட்டர் முயற்சி எடுத்து வருவதாக புளூம்பர்க் நியூஸ் நேற்று முன்தினம் தெரிவித்தது.
பணிக்குத் திருப்பி அழைக்கப்படுபவர்களில் சிலர் தவறுதலாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள். வேறு சிலரோ, திரு மஸ்க் விரும்பும் அம்சங்களைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனுபவத்தைக் கொண்டிருப்பதை நிர்வாகம் உணர்ந்துள்ளதாக அச்செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
இதற்கிடையே, உலகம் குறித்த ஆக துல்லியமான தகவலை வழங்கும் தளமாவதே டுவிட்டரின் இலக்கு என்று திரு மஸ்க் கூறி இருக்கிறார். ஆனால், இந்த நிலையை டுவிட்டர் எவ்வாறு எட்டும் என்பது பற்றியும் எது துல்லியமானது என்பதை யார் தீர்மானிப்பார் என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.
டுவிட்டரை தாம் கையகப்படுத்தியதில் இருந்து அதன் வருவாய் கணிசமாகக் குறைந்ததாக திரு மஸ்க் கூறியிருப்பது, அந்த நிறுவனத்தின் நிதி நிலவரம் நிலையில்லாமல் இருப்பதைக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

