கெர்சான்: கெர்சான் பகுதியை கைப்பற்றிவிட்டதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி அறிவித்தார்.
உக்ரேனின் சிறப்புப் படை வீரர்கள் கெர்சானுக்குள் நுழைந்துவிட்டதாக டெலிகிராமில் பதிவிட்டிருந்த அவர், கெர்சான் மக்களுடன் உக்ரேனிய வீரர்கள் நிற்கும் காணொளியையும் வெளியிட்டு இருந்தார்.
கெர்சான் பகுதியில் இருந்து தமது படைகளைத் திரும்ப பெற்றுக்கொள்வதாக ரஷ்யா இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து உக்ரேனிய வீரர்கள் அங்கு நுழைந்தனர்.
நகரின் முக்கிய பகுதிகளில் அவர்கள் உக்ரேனியக் கொடியை ஏற்றும் காட்சிகளும் அவா்களைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
கெர்சான் சதுக்கத்தில் இரவு நேரத்தில் ஒன்றுகூடி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தேசிய கீதம் பாடும் காணொளியை உக்ரேனிய நாடாளு மன்றம் வெளியிட்டுள்ளது.
கெர்சானில் உக்ரேனிய தொலைக்காட்சி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
"ரஷ்யப் படையினா் அந்த நகரிலிருந்து வெளியேறிய பாதையை உன்னிப்பாக கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கெர்சானுக்குள் நுழையும் உக்ரேன் படையினருக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அது தடுத்து நிறுத்தப்படும்," என்று உக்ரேனியப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நகரில் பதுங்கியிருக்கக்கூடிய ரஷ்யப் படையினரைத் தேடும் நடவடிக்கை நிறைவடையும் வரை பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமெட்ரி குலேபா, "போர்க்களத்தில் வெற்றி பெற்று வருகிறோம். இருப்பினும், ரஷ்யாவின் பிடியில் உக்ரேனை விடுவிப்பதற்கான போர் தொடர்கிறது," என்றார்.
ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்த ஆசியான் நாடுகளின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொண்ட குபேலா, எனினும் உக்ரேனுக்கு ஆதரவளிக்க பல்வேறு வழிகள் இருப்பதாகவும் ஆசியா, உலகின் மற்ற நாடுகளுக்கான உணவு ஏற்றுமதியை உக்ரேன் உறுதிசெய்யும் என்றும் சொன்னார்.

