தோக்கியோ: ஆக்கப்பூர்வமான, நிலையான உறவைக் கட்டியெழுப்ப சீனாவும் ஜப்பானும் பாடுபடும் என்று தாம் நம்புவதாக சீனத் தலைவர் லி கிகுவெங்கிடம் ஜப்பானியப் பிரதமர் கிஷிடா சொன்னதாக
ஜப்பானிய உள்துறை அமைச்சு கூறியது.
கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற் தலைவர்களும் அங்கு சென்றுள்ளனர்.
கூட்டத்திற்கு முன்னதாக சந்தித்த சீனா, ஜப்பானின் தலைவர்கள் இரு நாட்டு உறவின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
அடுத்த சில வாரங்களில் பேங்காக்கில் நடைபெறவுள்ள அபெக் மாநாட்டின்போது கிஷிடா, சீன அதிபர் ஸி ஸின்பிங்கைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், பேரழிவு ஆயுதங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கிஷிடா சொன்னார்.
இந்த மாநாட்டில், கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கம்போடியா சென்றடைந்துள்ளார்.
சீனா, ஜப்பானுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக தென்கொரியாவும் தெரிவித்துள்ளது.
சீனாவை தனது பெரிய வர்த்தக பங்காளியாக கருதும் ஆசிய நாடுகளில் அமெரிக்கா தனது பாதுகாப்பு பங்காளித்துவத்தைப் மேம்படுத்துவதற்கு அமெரிக்கா முற்பட்டு வருகிறது.
இவ்வேளையில் ஆசியான் தலைவர்களுடனான பைடனின் சந்திப்பு அதை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவும் என்று நம்புவதாக வெள்ளை மாளிகை கூறியது. ஆனால், பைடனின் இச்சந்திப்பு அதற்கான குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வராது என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசும் ஆசியான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

