கோலாலம்பூர்: 2022 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் இந்தக் கூட்டணியே பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சாபா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அன்வார் இப்ராஹிம். அப்போது அவர், அண்மையில் அங்கு வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம் என்றும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியே ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகளை வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் கணிப்பு வெளியிட்ட ஆய்வாளர்கள் களத்தில் இறங்கி ஆய்வு செய்திருந்தால் அவர்களுக்கு உண்மை புலப்பட்டிருக்கும். அவர்கள் நிச்சயம் களத்திற்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், நான் இந்த நாடு முழுதும் சென்று மக்களைச் சந்தித்துள்ளேன். வாக்காளர்கள் குறித்த உண்மை நிலவரத்தின்படி நிச்சயம் பக்கத்தான் ஹரப்பான் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். அதற்காக நாங்கள் இன்னும் சற்று கூடுதலாகப் பாடுபடவேண்டும் என்று மலே மெயில் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மலேசியாவின் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 222. அதில் 112 தொகுதிகளில் வெல்லும் கட்சிகள் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறும்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் மேலும் இரண்டு முக்கிய கூட்டணிகள் உள்ளன அவை பாரிசான் நேசனல் (பிஎன்), பெரிக்காட்டான் நேசனல் (பிஎன்).
கடைசியாக மெர்டெகா சென்டர், நவம்பர் 5 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, மேற்கு மலேசியாவின் மாநிலங்களில் மூன்றில் ஒரு மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

