கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் கடைசிக்கட்ட பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.
வாக்காளர்களை ஈர்த்து, அவர்
களது ஆதரவைப் பெற வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வராதவர்களைத் தம் பக்கம் இழுக்க வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்காளர்களை நேரில் சந்திப்பது மட்டுமின்றி சமூக ஊடகம் வழியாகவும் வாக்காளர்களுடன் வேட்பாளர்கள் தொடர்புகொள்கின்றனர்.
பொது விடுமுறை
இதற்கிடையே, தேர்தலுக்கு முதல் நாளான இம்மாதம் 18ஆம் தேதி, தேர்தல் நாளான 19ஆம் தேதி ஆகிய இரு நாள்களிலும் பொது விடுமுறை என்று மலேசியாவின் இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, இந்த இரண்டு நாள்களில் தனியார் வாகனங்களுக்கான சாலைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க மேலும் பல மலேசியர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாக்களிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு
இந்நிலையில், வாக்காளர் விகிதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்கு அது சாதகமாக அமையும் என்று பரவலாகப் பேசப்
படுகிறது. குறிப்பாக, பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதனால், வாக்களிக்கத் திரண்டு வருமாறு மலேசியர்
களுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. மலேசியாவுக்கு வந்து வாக்களிக்கும்படி வெளிநாடு களில் வசிக்கும் அல்லது பணிபுரியும் மலேசியர்களையும் எதிர்க்கட்சியினர் ஊக்குவிக்கின்றனர்.
முகக்கவச விதிமுறை
இது ஒருபுறம் இருக்க, கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்கு அளிக்கும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுப் போக்குவரத்து பயன்படுத்த அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
'தந்திரச் சொற்களில் மயங்காதீர்'
எதிர்க்கட்சிகளின் அரசியல் தந்திரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மலேசிய சீனர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் வீ கா சியோங் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இனப் பாகுபாட்டு உணர்வைத் தூண்டுவதாக அவர் குறைகூறினார். இது நாட்டு மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்றார் அவர்.

