பெய்ஜிங்: கொரோனா கிருமி தொடர்பில் சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் கொவிட்-19 தடுப்புகளை உடைத்தெறிந்துவிட்டு வீதிகளில் நடமாடினர். இதைக் காட்டும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன.
சீன நகரான குவாங்சோவில் தினமும் அதிக எண்ணிக்கையில் கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எண்ணிக்கை முதன்முறையாக 5,000ஐத் தொட்டபோது, முடக்கநிலை மேலும் கடுமையாகலாம் என்ற யூகம் மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.
அதையடுத்து குவாங்சோவின் ஹைசு பகுதியில் மக்கள் தடுப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு இங்குமங்குமாக நடப்பதைக் காட்டும் காணொளிகள் டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
சீனாவில் திங்கட்கிழமையன்று புதிதாக 17,772 உள்ளூர் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இதுவாகும்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால் மக்களும் பதற்றநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

