நுசா டுவா, இந்தோனீசியா: ஜி20 உச்சநிலை மாநாடு நேற்றோடு முடிவடைந்த நிலையில், மூன்று திடமான பலன்களை அடைய முடிந்ததாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ குறிப்பிட்டார். சுகாதாரம், எரிசக்தி மாற்றம், நிதி ஆகிய அம்சங்களை அவர் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இந்தோனீசியாவின் தலைமையில் கொள்ளைநோய் நிதித் திட்டம் ஒன்றைத் தொடங்க நாடுகள் ஒப்புதல் அளித்தன. இந்த நிதி இடையீட்டுத் திட்டத்தின்வழி எதிர்காலக் கொள்ளைநோய்களுக்கு நாடுகளைத் தயார்படுத்த முடியும். இந்த நிதிக்கு மொத்தம் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.05 பி.) வழங்க உறுப்பு நாடுகளும் அனைத்துலக அமைப்புகளும் உறுதியளித்தன.
குறைந்த வருமான நாடுகள், சிறிய நாடுகள், எளிதில் பாதிப்படையக்கூடிய நடுத்தர வருமான நாடுகள் போன்றவற்றுக்கு உதவும் வகையில் அறநிதித் திட்டம் ஒன்றைத் தொடங்குவதை இரண்டாவது திடமான பலனாக அதிபர் விடோடோ குறிப்பிட்டார்.
கொள்ளைநோய், பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை உள்ளடக்கிய பெரிதளவிலான பொருளியல் பிரச்சினைகள் எதுவாயினும் அவற்றைச் சமாளிக்க அறநிதித் திட்டம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எளிதில் பாதிப்படையக்கூடிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மீள்வதற்கும் வலுவாக மீள்வதற்கும் ஆதரவு தர நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். 81.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்," என்று ஜி20 பாலி தலைவர்கள் உறுதியளிப்பு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பருவநிலை வல்லரசாகக் கருதப்படும் இந்தோனீசியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதைத் துரிதப்படுத்த அமெரிக்காவும் ஜப்பானும் நிதி அளிப்பதே மூன்றாவது பலனாகக் குறிப்பிடப்பட்டது. பொதுத் துறை, தனியார் துறை ஆகியவற்றின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் இத்திட்டத்திற்காக வழங்கப்படும்.
"இவற்றைத் தவிர மற்ற விளைவுகளும் உண்டு," என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் திரு விடோடோ.
உற்பத்தித் திறனைப் பெருக்க, விவசாயத்திலும் உணவுக் கட்டமைப்புகளிலும் மின்னிலக்கப் புத்தாக்கத்தைப் புகுத்துவதை ஆதரிக்கும் கூட்டுக் கடப்பாடு அவற்றில் ஒன்று என்றார் அவர்.
"ஜி20 என்பது பொருளியல், நிதி, மேம்பாடு தொடர்பான ஒரு மாநாடு. அது அரசியல் சார்பான மாநாடு அல்ல. அதை அவ்வாறு மாற்றிவிட வேண்டாம்," என்று அறிவுறுத்தி உள்ளார் அதிபர் விடோடோ. இதற்கிடையே, உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து வருவது தொடர்பில் ஜி20 தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்தும் இருந்தனர். ரஷ்யா அதன் படைகளை நிபந்தனைகளின்றி மீட்டுக்கொள்ள வேண்டும் எனக் கண்டனம் தெரிவிக்கும் உறுதியளிப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

