பாரிஸ்: உரத்த இசை ஒலிக்கும் இடங்களுக்குச் செல்வதாலும் காதொலிப்பானில் பாடல் கேட்பதாலும் உலகின் சுமார் ஒரு பில்லியன் இளையர்களுக்குக் காது கேளாமல் போகும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளையர்கள் தங்களின் செவித்திறன் பழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் கோரியது. எதிர்காலத்தில் இந்த அபாயத்தைக் குறைக்க நாடுகளும் உற்பத்தி நிறுவனங்களும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றது நிறுவனம்.
ஆங்கில, ஸ்பானிய, பிரஞ்சு, ரஷ்ய மொழிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட 33 ஆய்வுகளின் தரவுகளை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை, 'பிஎம்ஜே குளோபல் ஹெல்த்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வில் 12 முதல் 34 வயது வரையிலான 19,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சிகளிலும் இரவு உல்லாச விடுதிகளிலும் ஏறத்தாழ 48% இளையர்கள் அதிக இரைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

