பெய்ஜிங்: சீனாவில் புதிய உச்சமாக கிட்டத்தட்ட 20,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. முன்னதாக ஏப்ரலில் ஆக அதிக எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கொவிட்-19 கிருமியை முற்றிலும் அழிப்பதற்கான கட்டுப்பாடுகளை நாடு அமல்படுத்தி வரும் நிலை, அதிகாரிகளுக்குப் பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.
தனிமை உத்தரவுக்கான காலத்தைக் குறைத்தல், ஒட்டுமொத்தமாகக் கிருமிப் பரிசோதனையை மேற்கொள்ளுதல் என சீனா அதன் கொவிட்-19 உத்திபூர்வ அணுகுமுறையை மாற்றிக்கொண்டதால் பொருளியலும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அண்மைய கிருமித்தொற்று நிலவரம் சீனாவின் கொவிட்-19 அணுகுமுறைக்குச் சவால் விடுப்பதாக உள்ளது. இதற்கிடையே, ஷாங்காய் டிஸ்னி ரிசோர்ட்டின் ஒருசில பகுதிகள் இன்றுமுதல் செயல்படத் தொடங்கினாலும் அதன் மையமான 'டிஸ்னிலேண்ட் பூங்கா' தொடர்ந்து மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

