சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக தமக்கு எது சரியோ அதைச் செய்ய முடிவெடுத்த மாதுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதன் பலனாக இவரால் இரண்டு வீடுகளையும் இரண்டு கார்களையும் வாங்க முடிந்தது.
லியு என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த மாது, மேற்கல்வியை முடித்தவுடன் அலுவலகப் பணியில் சேர்ந்தார். பின்னர் அப்பணியிலிருந்து விலகிய அவர், துப்புரவாளராகி அதன்மூலம் கிடைத்த வெற்றிப் பயணம் குறித்து பகிர்ந்தார்.
தம்முடைய தாயாருக்கு உடல்நலம் குன்றி, தம்முடைய மகன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும் லியு குடும்பத்துக்குச் செலவினங்கள் கூடின.
அப்போது இவர் மாதந்தோறும் சம்பளம் பெறும் அலுவலகப் பணியில் இருந்தார்.
"வெவ்வேறு செலவினங்களுக்கு எனக்குப் பணம் தேவைப்பட்டதால், அலுவலக வேலையிலிருந்து விலகி துப்புரவாளராக முடிவெடுத்தேன்," என்றார் இவர்.
எனினும், வசதியான அலுவலகப் பணியிலிருந்து வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிக்கு மாறுவதைப் பற்றி யாரிடமும் சொல்ல லியு விரும்பவில்லை.
குறிப்பாக, தாம் துப்புரவாளராக வேலை செய்வது குறித்து தம்முடைய பெற்றோரிடமோ நண்பர்களிடமோ கூற இவருக்கு தைரியம் ஏற்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தாம் துப்புரவாளராக வேலை செய்வது பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் அது அவமானமாக கருதப்படும் என்று இவர் அஞ்சினார்.
எனினும், ஒரு கட்டத்தில் தமது பணி குறித்து தம்முடைய தந்தையிடம் லியு தெரியப்படுத்தினார். அதை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவர் ஆதரவளித்தது லியுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
"பல்கலைக்கழக படிப்படை முடித்ததால், குறிப்பிட்ட சில வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை," என்று தந்தை தம்மிடம் கூறியதாக லியு சொன்னார்.
துப்புரவாளராக பணியாற்றி இவர் இரண்டு வீடுகளையும் இரண்டு கார்களையும் வாங்கினார்.
அந்த வீடுகள் அடக்கமுள்ள அளவில் இருந்தாலும், அவற்றுக்குச் சொந்தக்காரராகி இருப்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாக லியு சொன்னார்.
தாம் செய்யும் பணியை நிறுத்த தமக்குத் திட்டமில்லை என்றும் இவர் கூறினார்.
"எதிர்காலத்திலும் நான் இந்தத் துறையில்தான் இருக்க விரும்புகிறேன். இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன," என்றார் இவர்.
லியுவை பொறுத்தமட்டில், நாள் ஒன்றுக்கு காலை 7 மணியிலிருந்து பின்னிரவு 2 மணி வரை 17 மணி நேரம் வேலை செய்ய முடியுமாம்.
வேலைக்கு மத்தியில் இவர் உணவு உண்ண வேண்டியுள்ளது. பல சமயங்களில் இவரால் உட்கார்ந்து உணவு உண்ண நேரம் இருக்காது. பரபரப்பான நேரத்தில் ரொட்டியும் தண்ணீரும் அருந்திவிட்டு வேலையைத் தொடர்வார்.
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஆக்ககரமான கருத்துகளே இந்த வேலையில் தொடர இவரை ஊக்குவிக்கின்றன.

