பெட்டாலிங் ஜெயா: வாக்களிப்பு விகிதம் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தால் பக்கத்தான் ஹரப்பான் தேர்தலில் நிச்சயம் வெல்லும் என்று கெஅடிலான்
கட்சித் துணைத் தலைவர் ரஃபிசி ராம்லி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நேர்ந்தால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 100க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். ஆனால் வாக்களிப்பு விகிதம் ஏறத்தாழ 70 விழுக்காடாகப் பதிவானால் பக்கத்தான் ஹரப்பானுக்கு 90 முதல் 100 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றார் அவர். ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
"அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்களிப்பு விகிதத்தைவிட இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என நம்புகிறோம். வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.
"அதுமட்டுமின்றி, சாலைகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இவற்றைப் பார்க்கும்போது வாக்களிப்பு விகிதம் அதிகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது," என்று திரு ரஃபிசி தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு விகிதம் ஏறத்தாழ
83 விழுக்காடாகப் பதிவானது.
"தேர்தல் நாளன்று பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்னதாக வாக்களித்து விடுங்கள்," என்று வாக்காளர்
களைத் திரு ரஃபிசி கேட்டுக்கொண்டார். வெற்றி பெறும் கூட்டணியை நிர்ணயிப்பதில் 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றார் அவர்.

